தமிழக முதல்வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு இன்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துகள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகி இருக்கும் நிலையில் இன்று மாலை இன்னும் சற்று நேரத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்திக்க இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் உடல்நலம் குறித்து விசாரிக்க இந்த சந்திப்பு என்ற நிலையிலும் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய சூழலில் ஏற்படும் சந்திப்பு என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இன்று காலை அடையாறில் நடைபயிற்சியின் போது மு.க.ஸ்டாலினும், ஓபிஎஸ்-சும் சந்தித்துக் கொண்ட நிலையில் மீண்டும் இரண்டாவது சந்திக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.