'All three are guilty...' - Court's sensational verdict in Coimbatore Airport incident Photograph: (police)
கடந்த வருடம் கோவை விமான நிலையம் பின்புறம் ஆளரவமற்ற பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் போதை இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 02.11.2025 அன்று கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சட்டவிரோத மதுபான பார் இயங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சட்டவிரோத பாரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு காரணம். இதை நடத்தியது யார்? எனக் கேள்வி எழுப்பினர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து இந்த சம்பவமும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 மாதங்களாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது நீதிபதி சுந்தர்ராஜன் இந்த வழக்கில் 72 பேரிடம் சாட்சி விசாரணைகள் செய்து, அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தண்டனை விவரமும் அறிவிக்கப்பட உள்ளது கோவை நீதிமன்றம்.
Follow Us