சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த பணி நடைபெறும் பகுதியில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த ஒரு கும்பல் அவரது மனைவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை என மொத்த குடும்பத்தையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த சடலங்களை வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வீசி சென்றுள்ளது.

Advertisment

கடந்த இரு தினங்களுக்கு முன்பு குப்பைப் பகுதியிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சடலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, அதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலமானது கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனைவியின் சடலத்தை  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

753
'All this is the height of cruelty; what will MK Stalin say in response to this' - Edappadi Palaniswami condemns Photograph: (police)
Advertisment

மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம், சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற,  மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை  போல் வாய்ச்சவடால் பேசும்  பொம்மை முதலமைச்சர் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.