கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில்,  ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இதற்கிடையில், இந்த துயரச் சம்பவம் நடந்ததற்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தததும், தவெகவினர் கூட்டத்தை நெறிப்படுத்தவில்லை என்றும் காவல்துறை குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதே சமயம், காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுக தலைமையிலான அரசு பழிவாங்குவதாகவும் தவெகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Advertisment

இப்படி காவல்துறை தரப்பும், தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பேற்க முடியாது என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அஜித் குமார், “இதையெல்லாம் சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் கூட்ட நெரிசலால் இவ்வளவு நடக்கிறது. கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு நபர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும் அதற்கு பொறுப்பு. ஊடகங்களுக்கும் இதில் பங்கு வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இன்று நாம், தங்கள் கூட்டத்தைக் காட்ட ஒரு கூட்டத்தை ஒன்று திரட்டுவதில் வெறி கொண்ட ஒரு சமூகமாக மாறிவிட்டோம். இதெல்லாம் முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிக்கு கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. இது ஏன் அச்சுறுத்தலாக மட்டுமே நடக்கிறது? பிரபலங்களுக்கு மட்டும் ஏன் நடக்கிறது? இது முழு திரைப்படத் துறையையும் உலகளவில் மோசமாகக் காட்டுகிறது. நாங்கள் இதை விரும்பவில்லை. அன்பைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் நாங்கள் கடினமாக உழைக்கிறோம்.

Advertisment

குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் நீண்ட நேரம் இருப்பது, படம் எடுக்கும் போது காயப்படுத்துவது, மனச்சோர்வை அனுபவிப்பது, தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து செல்வது போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள். இதெல்லாம் எதற்காக மக்களின் அன்பிற்காக தான். ஆனால் உங்கள் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.