Ajit Pawar's wife takes oath as Maharashtra Deputy Chief Minister Photograph: (ajith pawar)
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் அமைச்சரவையில் துணை முதல்வராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் பூனே மாவட்டத்தில் உள்ள பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அஜித் பவார் மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் கடந்த 28ஆம் தேதி (28.01.2026) பயணம் மேற்கொண்டார்.
அதன்படி இந்த விமானம் காலை 08.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்க முயன்றது. அப்போது ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கி விமானத்தில் இருந்த அஜித் பவார் இரு உதவியாளர்கள் (தனி பாதுகாப்பு உதவியாளர் மற்றும் உதவியாளர்) மற்றும் 2 விமானிகள், உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அஜித் பவார் வகித்து வந்த துணை முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில் ஒலித்தது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளையும் (சரத்பவார் மற்றும் அஜித்பாவர்) பிப்ரவரி 8ஆம் தேதி ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் அதன் தலைவராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்பது குறித்த கேள்வியும் எழுந்தன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (31.01.2026) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதன் பிறகு அவர் துணை முதல்வராகப் பதவி ஏற்பார் எனவும் கட்சியின் மூத்த தலைவர் சாகன் புஜ்பால் தெரிவித்திருந்தார். அதன்படி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை தற்போது துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட சுனேத்ரா பவார், சரத்பவாரின் மகள் சுப்ரிலா சுலேவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us