'Ajit Pawar praised women pilots'- post goes viral Photograph: (ajith pawar)
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் அஜித்பவார். இத்தகைய சூழலில் தான் பூனே மாவட்டத்தில் உள்ள பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் இன்று (28.01.2026) பயணம் மேற்கொண்டார். அதன்படி இந்த விமானம் காலை 08.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்க முயன்றது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த விபத்தில் சிக்கிய விமானம் தீப்பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் அஜித்பவார் மரணம் அடைந்தார். மேலும் 2 உதவியாளர்கள் (தனி பாதுகாப்பு உதவியாளர் மற்றும் உதவியாளர்) மற்றும் 2 பணியாளர்கள், துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் முழு விவரம் வெளியாகியுள்ளது. தலைமை விமானி சுமித் கபூர், துணை விமானி ஷாம்பவி பகத், அஜித் பவார் மற்றும் அவரின் உதவியாளர் பிங்கி மாலி, அஜித்பவாரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். துணை விமானி ஷாம்பவி பகத் வளர்ந்து வரும் பெண் விமானி ஆவார். டெல்லி எர் போர்ஸ் பால்பாராதி பள்ளியில் படிப்பை முடித்த ஷாம்பவி பகத், மும்பை பல்கலைக்கழகத்தில் வானூர்தியியல் மற்றும் விண்வெளி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பெண் விமானிகளை பாராட்டி கடந்த 2024 ஆம் ஆண்டு அஜித்பவார் வெளியிட்டிருந்த எக்ஸ் வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow Us