பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி நேற்று முன்தினம் (06.09.2025) அங்கி வந்திருந்தார். அப்போது, டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. முன்னதாக ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

அதன் பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. டிஜிபி அலுவலகத்தின் வாயிலில், காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் மக்கள்ம் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மெரினா காவல் நிலையத்தில் ஏர்போர்ட் மூர்த்தி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மற்றொரு புறம் விசிக பிரமுகர் திலீபன் என்பவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் மூலம் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார், அடையாற்ற்றில் உள்ள அவரது வீட்டில் வைத்தே கைது செய்தனர். அதோடு அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஏர்போர்ட் மூர்த்தி தன் கையில் வைத்திருந்த கத்தி மூலம் திலீபனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். 

அதன் பின்பு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் குணமானதையடுத்து சென்னை பெருநகர எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஏர்போர்ட் மூர்த்தியை ஆஜர்ப்படுத்தினர். அப்போது நீதிபதி அவருக்கு வரும் 22ஆம் தேதி (22.09.2025) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறபித்துள்ளார். இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியைப் புழல் சிறையில் அடைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.