தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு இன்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துகள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன நிலைப்பாடு தான் என்னுடையதும். இந்த சூழ்நிலையில் நானும் ஒரு அடிமட்ட தொண்டன் தான். அதிமுக தொண்டர்களின் இன்றைய நிலைப்பாடு என்பது ஜெயலலிதா மறைந்த நேரத்தில் இந்த இயக்கத்தினுடைய வாக்கு சதவீதம் எந்த அளவிற்கு இருந்தது. இன்று அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் என்ன நிலையில் சரிந்துள்ளது என்பது தெரியும். 

இதற்குக் காரணம் கட்சியில் ஏற்பட்ட பிளவு தான் காரணம். அதிமுக ஒன்றிணைந்தால் தான் இந்த இயக்கம் வலிமை பெற்று  எதிர்காலத்தை நோக்கி ஆட்சியில் அமரக் கூடிய நிலை வரும் என்பது ஒவ்வொரு தொண்டனுடைய கருத்து மட்டுமல்ல பொதுமக்களின் கருத்தும். இது தான் என்னுடைய நிலைப்பாடு'' என்றார்.

Advertisment

'எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது' என்ற கேள்விக்கு, ''அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்வதை விட, இதற்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் போக்கில் விடுகிறேன்'' என்றார்.