தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டங்கள், மாநாடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பரப்புரை என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, பா.ஜ.க, அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

Advertisment

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்ற போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக - பா.ஜ.க இடையே கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருபுறம், ஆங்கில நாளிதழ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.கவின் பங்கு அதில் இருக்கும் என்று தெரிவித்து வந்தார். மறுபுறம் இதை மறுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றும் தனித்து ஆட்சி தான் நடக்கும், கூட்டணியில் பங்கு கிடையாது என்றும் தெரிவித்து வந்தனர்.

Advertisment

கடந்த சில மாதங்களாக கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்ற விவகாரம் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எழாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. இன்று நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய நிர்வாகிகள் முன்பு பேசியதாவது, “இங்கு வருகை தந்திருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனேகமாக இங்கிருந்தே 20, 30 சட்டமன்ற உறுப்பினர்களாக செல்வார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அது நடக்கப்போகிறது. இங்கிருப்பவர்கள் அமைச்சர்களாகக் கூட வருவார்கள். இது நிச்சயமாக நடக்கும்” என்று கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுமாகின், ஆட்சியில் பங்கு பெற்று பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம்பெறுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் சூசகமாக கூறியுள்ளார். இதனால், அதிமுக - பா.ஜ.க கூட்டணிக்குள் குழப்பம் நிலவியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment