AIADMK harshly criticizes O.panneerselvam
தமிழ்நாட்டில் 3 முறை முதல்வராக முதல்வராகப் பதவி வகித்தவரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (27-02-26) முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஐயப்பனும் ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக ஐடி விங், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘கூச்சமே இல்லையா ஓ.பி.எஸ்?.. ‘ரோஸி டீக்கடை’ நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். ஜெயலலிதா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அதிமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள், எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்.
பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான அதிமுகவின் தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு ஜெயலலிதா எல்லாம் சும்மா தானே?,. ‘உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க’ என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள். இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். (பி.கு. : தயவு செய்து ஜெயலலிதா புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்)” எனத் தெரிவித்துள்ளது.
Follow Us