திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் எம்.பி. வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் பெருந்தன்மையுடன் முன்வந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி, போட்டியிடவில்லை.
அதனைத் தொடர்ந்து, அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, "உங்களுக்கு தகுந்த பொறுப்பும், உரிய வாய்ப்பும் நிச்சயமாக வழங்கப்படும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்யுங்கள்" என்று பாராட்டி பேசியிருந்தார். இதன் அடிப்படையில், சிம்லா முத்துச்சோழன் கட்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவரது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக ஆன்லைன் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: "நான் எனது அரசியல் விமர்சனங்களை சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளாகப் பகிர்ந்து வருகிறேன். என்மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, யாரோ ஒருவர் எனது முகநூல் கணக்கை ஹேக் செய்து, கணக்கின் பெயரை 'Adv. Shimla Muthuchozhan' என்பதிலிருந்து 'வீடியோ ஃபன் 1' என மாற்றியுள்ளார். பின்னர், எனது முகநூல் கணக்கு முழுமையாக நீக்கப்பட்டு, அனைத்து தரவுகளும் இழக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல், எனது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இழப்புகளை ஏற்படுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாக கருதுகிறேன்.
ஏற்கனவே 2023-ல், எனது முகநூல் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்திருந்தேன். அப்போது, எனது பெயரில் போலி ஐடிகள் உருவாக்கப்பட்டு, எனது நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து பணம் மற்றும் ரகசியத் தகவல்களை மோசடி செய்ய முயற்சிக்கப்பட்டது. இப்போது, அதன் தொடர்ச்சியாக, எனது கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
எனது கணக்கை ஹேக் செய்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, எனது சமூக ஊடகக் கணக்குகள் திட்டமிட்டு ஹேக் செய்யப்பட்டுள்ளன என நம்புகிறேன். இந்தப் புகாரை அவசரமாக விசாரித்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.