தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு, நாய் மற்றும் மாடுகள் உள்ளிட்டவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், விபத்துகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்றுகளும் பரவி வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து பல முறை கோரிகை வைத்தும் நடவடிக்கை இல்லை என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலகர் பலமுறை வலியுறுத்தி வருவதாகவும், ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்கள் மாடுகள், தொல்லைகளை கட்டுப்படுத்தவில்லை என்பதை உணர்த்துவகையில், அது தொடர்பான பொம்மைகளை 31 ஆம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் எடுத்து வந்திருந்தனர். மேலும் கொசு தொல்லை இருப்பதாக கூறி கொசு வலையையும் உடம்பில் போர்த்திக் கொண்டு வந்திருந்தனர். அப்போது நடவடிக்கை எடுக்காத மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்துடன் நாய் போன்றி கத்தியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேயர் வசந்தகுமாரி மற்றும் துணை மேயர் காமராஜ் இருவரும், நீங்கள் இங்கிருந்து உடனடியாக வெளியே போங்க..” என்று கடுமையாக பேசியுள்ளனர். இதையடுத்து மேயருடன் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்பு கூட்டத்தில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் மாமன்றத்தில் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி நுழைவாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மாமன்ற கூட்டத்தின் போது, அதிமுக உறுப்பினர்களை பார்த்து ‘நாய் பூனை எல்லாம் வெளியே போ..’ என்று திமுக உறுப்பினர்கள் பதில் கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினரிடையே மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us