மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழகத்தில் ஒரு பக்கம் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். அதில் இளநிலை ஆசிரியர்கள் ஒரு பக்கம், உதவி பேராசிரியர்கள் ஒரு பக்கம், துப்புரவுப் பணியாளர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். செவிலியர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். மருத்துவர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். பெற்றோர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள். மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மதுக்கடைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இப்படி தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அன்றாடம் போராட்டம். திமுக மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் வெறும் 13 விழுக்காடு தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அனைத்து மக்களும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்துறை வளர்ச்சி மைனஸில் இருக்கிறது .கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம் இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். இப்படி எந்த ஆட்சியிலும் இருந்தது கிடையாது. அதே நேரத்தில் உழவர்களுக்கு  கடந்த ஆண்டு நாசமடைந்த பயிருக்கு இன்று வரை இழப்பீடு கிடைக்கவில்லை. ஓராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்று கிடையாது. தமிழக முதல்வருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. கடனை மட்டும் வாங்கி உள்ளார்கள்.

62 ஆயிரம் கோடி ஆண்டுக்கு வட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை அடுத்து உத்தரப்பிரதேசம். எதற்கு இந்த கடனை வாங்குகிறார்கள் என்றால் அன்றாட செலவுக்காக. இது எவ்வளவு கொடுமை. கடன் வாங்குவதில் கேப்பிட்டல்  இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அன்றாட செலவுக்காக கடன் வாங்கி உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒரு வீடு கட்டுபவர் வீட்டை கட்டுவதற்கு கடன் வாங்கலாம் ஆனால் வீட்டுக்குள் வாழ்வதற்கு கடன் வாங்கக் கூடாது. சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, குளிப்பதற்கு எல்லாம் கடன் வாங்கக் கூடாது. அதைத்தான் தமிழ்நாடு செய்து கொண்டிருக்கிறது. நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியவில்லை அவர்களுக்கு. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

Advertisment