தைப்பூச திருநாளை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளிலும், மருதமலை முருகன் கோயிலும், சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பழனியில் வெகு விமரிசையாக நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி சுமந்து பாதயாத்திரை வந்த பக்தர்கள்  வழிபாடு செய்தனர். இந்நிலையில் பல்வேறு தலைவர்களும் தைப்பூச திருநாளுக்கு வாத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள். அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால், "வேலுண்டு வினையில்லை" என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள், இந்த தைப்பூசம் திருநாள்.வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும். தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான, ஜெயலலிதா அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment

அதே போன்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பக்தியும் பொறுமையும் துணையாக, அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி, உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்கிறேன். நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

admk-hq-1

மேலும் நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021ஆம் ஆண்டு  நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தைப்பூசத் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்தமையை நினைவுகூர்ந்து வாழ்த்தியுள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment