தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அதோடு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் அமமுக, அன்புமணியின் பாமக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவித்திருந்தது. என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கடந்த 15ஆம் தேதி (15.12.2025) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதனை பலரும் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/01/eps-mic1-2026-01-01-16-30-38.jpg)
அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து' 2 ஆயிரத்து 187 விருப்ப மனுக்களும்; கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7 ஆயிரத்து 988 விருப்ப மனுக்களும், ஆகமொத்தம் 10 ஆயிரத்து 175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us