சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.
இத்தகைய சூழலில்தான் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதே சமயம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அப்பாவு இருக்கை முன் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அச்சமயம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் சென்று அமர சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாகச் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைக் காவலர்களைச் சபாநாயகர் அப்பாவு அழைத்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சட்டப்பேரவையின் வாயிலில் நின்று கோஷம் எழுப்பினர். இதனால் சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவை வளாகத்திலும் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.