சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதோடு மறைந்த முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளராகப் பதவி வகித்த சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு இன்று கைகளில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து வந்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.