தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டம் நடைபெற்ற பின் மதுரையிலே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணித் தலைவர்களிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 170க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும், பா.ஜ.க மற்றும் பா.ம.கவுக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் கடந்த 2ஆம் தேதி டெல்லிக்கு விரைந்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதி பங்கீடும், மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (04-03-26) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காங்கிரஸில் இருக்கும் சிலர் ஆந்திராவில் போய் கூட்டணி பேசுகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தவெகவுடன் கூட்டணி சென்றால் ராஜினாமா செய்வோம் என்று சொல்கிறார்கள். ஆகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஒரு குழப்பமான சூழ்நிலை. விரைவில் காங்கிரஸ் திமுக உறவு வெட்ட வெளிச்சமாகிவிடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மீண்டும் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

இதையடுத்து திமுக - அதிமுக இரண்டுமே ரகசிய உறவோடு இருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஒரு ஸ்கிரிப்டை மனப்பாடம் பண்ணி பேசுவது ரொம்ப ஈசி. அது யார் வேண்டுமானாலும் பேசலாம். ஏற்கெனவே அவர் கை தேர்ந்த நடிகர், அதை அவருக்கு சொல்லி தர தேவையில்லை. எப்படி வேண்டுமோ அப்படி அவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக வெளிப்படுத்த முடியும். ஒரு முறையாவது அவர் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். செய்தியாளர்களைச் சந்தித்து பதில் சொல்வது ஒரு தில்லு வேண்டும், திராணி வேண்டும். அந்த தில்லு திராணி இல்லாமல் என்னமோ இவருக்கு தான் இருக்கிற மாதிரி பேசுகிறார். ஆதவ் அர்ஜுனாவும் அருணும் தான் டைரக்டர், இவர் ஸ்கிரிப்டை படிக்கிற ஒரு நடிகர்.

Advertisment

ஆரம்பத்தில் ஆட்சியில் பங்கு தருவோம், அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று சொன்னார். ஆனால் ஒருத்தரும் வரவில்லை. ஒருத்தர் கூட தவெக பக்கம் போகவில்லை. எந்த கட்சியும் போகாததால் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் எங்கள் பக்கம் திரும்பிருக்கிறார். எங்கள் பக்கம் திரும்பினால் வீணா வாங்கி கட்டிக்கிற நிலைமை தான் தவெகவுக்கும் விஜய்க்கும் ஏற்படும்” என்று கூறினார்.