Advertisment

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு!

hc

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி (11.07.2022) சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இந்த அறிவிப்பை எதிர்த்தும், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதோடு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் சூரியமூர்த்தி தனியாக உரிமையியல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த 4வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் கண்ணன் பிறப்பித்த உத்தரவில், “அதிமுக கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விதிகளின் படிதான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தொடர்பாக எந்த விவரங்களும் இந்த மனுவில் தெரிவிக்கப்படவில்லை. எனவே சூரியமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்” எனத் தெரிவித்தார். அதோடு சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி பிபி பாலாஜி அமர்வில் இன்று (25.08.2025) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து சூரியமூர்த்தி அதிமுகவின் உறுப்பினராக இல்லை. அதோடு அதிமுக வேட்பாளர் எதிர்த்து சூரியமூர்த்தி ஒரு தேர்தலில் போட்டியிட்டார். அதாவது கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது சூரிய மூர்த்தி தரப்பில் வாதிடுகையில், “கட்சியைப் பொறுத்தவரை கட்சியின் விதிப்படி தான் இன்னும் கட்சியில் தொடர்கிறேன். 

கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியினுடைய நிறுவனர் எம்ஜிஆரின் விருப்பத்தை மீறி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை விதி. அதை பொதுக்குழு வால் மாற்ற முடியாது. அதேபோல எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் கூட்டணியுடன் தான் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டேன்” எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

general secretary judgement high court admk Edappadi K Palaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe