புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வி.சி.ஆர் (எ) வி.சி.ராமையா. அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும், மாவட்டக் குழு சேர்மனாகவும் இருந்தவர். தற்போது அ.தி.மு.க வடக்கு மாவட்டப் பொருளாளராக இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இன்று (01.12.2025) காலை வழக்கம் போலக் கட்சிப் பணிக்காக வாண்டாகோட்டை தனது வீட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பூவரசக்குடியில் திருவரங்குளம் சாலையில் திரும்பும் போது பின்னால் வேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தார். இதனையடுத்து வி.சி.ராமையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்தில் பலியான விசி.ராமையா உடல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அதே சமயம் மாவட்டம் முழுவதில் இருந்தும் அதிமுகவினர் அங்குக் குவிந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வல்லத்திராகோட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow Us