அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் முதல் சட்டமன்றக் குழுவிலேயே எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் பல்வேறு முக்கிய பதவிகளிலும் பொறுப்பு வகித்த மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

Advertisment

இதற்கிடையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களைச் சந்தித்து செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவர் திமுகவின் பி டீம் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதே போல், எடப்பாடி பழனிசாமியின் முடிவின் காரணமாக தான் பல்வேறு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததாகவும், அவர் கொடநாடு வழக்கின் ஏ1 குற்றவாளி என்றும் செங்கோட்டையன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இப்படி மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் 5ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. 

Advertisment

அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டமிட்டப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (05.11.2025) காலை 10:30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  அப்போது அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது எனவும் கூறப்படுகிறது.