தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் விஜய் தரப்பில் இருந்து நேற்று (30.09.2025) வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் (29.09.2025) சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா, சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ய வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். இந்த பதிவு கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆதவ் அர்ஜூனா 5 பேருடன் டெல்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ஆதவ் அர்ஜுனா டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 4ஆம் தேதி உத்தரகாண்டில் 55வது சப் ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க உள்ளது. எனவே கூடைப்பந்து விளையாட்டுப் பொதுச் செயலாளர் பொறுப்பில் அவர் உள்ளதன் காரணமாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக அவர் டெல்லி செல்கிறார் எனவும் கூறப்படுகிறது.