சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் மின்சார ரயில் சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயணிகளின் வசதிக்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதல் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. 

Advertisment

அதன்படி காலை நேர நெரிசலைக் குறைக்க, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே 'விரைவு ரயில்' (Fast Line) பாதையில் தற்போதுள்ள ரயில்களுடன் கூடுதலாக 15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று, மாலை நேர நெரிசலை குறைக்க சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மறுமார்க்கத்தில்  15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, சென்னை எழும்பூர் மற்றும் சென்னை கடற்கரை ஆகிய குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே மட்டுமே நின்று செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே (தலைமைச் செயலகம் வழியாக - (Secretariat)) கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Advertisment

எனவே தகுந்த மின்சார ரயில் டிக்கெட்டுகள் (EMU tickets) மற்றும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்தப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். காலை 06:40 மணி முதல் 09:40 மணி வரை, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு 7 நிமிட இடைவெளியில் 20 பேருந்து நடைகள் (Trips) இயக்கப்படும். மாலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு 7 நிமிட இடைவெளியில் 20 பேருந்து நடைகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம் மற்றும் பாரிமுனை ஆகிய முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.