தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.  

Advertisment

அதே போன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகைகள் திரிஷா, நயன்தாரா மற்றும் நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே சமயம் கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நக்கீரன் அலுவலகம், தவெக தலைவர் விஜய்யின் வீடு, பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

Advertisment

இந்நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிலும், திமுக தலைமை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளி எனத் தெரிய வந்தது. அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய் வீட்டிற்கும், அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.