தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் (எஸ்.ஐ.ஆர்) முறை நாடு முழுவதும் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ், திமுக மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு நடப்பதாக அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வந்தார். இது குறித்து, தேர்தல் ஆணையத்திற்குப் பல முறை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து, உயிருடன் இருப்பவர்களை, இறந்தவர்களாக அறிவித்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். பின்பு, அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று, தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் அளித்தார். இருப்பினும், முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக மம்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தானே நேரடியாக ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார். தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த அவர், தாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு எந்தவித பதிலையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், இதற்கு உரிய பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஏழு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. விரைவில் தேர்தல் வரவுள்ளதையொட்டி வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது 1.63 லட்சம் பேர் தகுதியற்ற வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் வடக்கு, தெற்கு மற்றும் பர்க்கனஸ் ஆகிய மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அதிகப்படியான பெயர்களைச் சேர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக பருய்ப்பூர் கிழக்கு மற்றும் மொய்னா தொகுதிகளைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் பணி இடை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் வாக்காளர்களைப் பட்டியல் புதுப்பித்தல் மற்றும் தேர்தலை நடத்துவதற்கான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/electioncommission-2026-02-17-19-13-15.jpg)