பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மறுபுறம், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது. இதில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று விழுப்புரம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்துகொண்டுள்ளார். மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பா.ம.க. பொதுக்குழுவில் பா.ம.க. விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ‘சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. ராமதாஸைத் தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அனைத்துத் தேர்தல்களிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் எனத் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம். பா.ம.க. அமைப்பு ரீதியாக 35-ஆவது விதியைத் தொடங்கி தீர்மானம் நிறைவேற்றம். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றப்பட்டும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு, பா.ம.க. நிறுவனர் தலைமையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு தட்டிக்கழிக்காமல் உடனடியாக ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.