கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சம்புபாய் என்கிற நசீர் என்பவரை லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காக யாரெல்லாம் உதவி செய்கிறார்கள், யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை காவல்துறையினருக்கு ஆதாரத்துடன் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி உமா, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஐஜி உத்தரவின் பேரில் சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கணேசன், நடராஜன், காவலர் கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்தி உள்ளிட்ட 7 பேர் வேலூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிதம்பரம் நகரத்தை சேர்ந்த நசீர், இசை சரவணன், கிருபாகரன், முருகன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இவர்கள் இந்த இடத்தில் பணியில் இருந்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் அதனால் தற்போது அவர்களை வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. என்றும் விசாரணையில் உண்மை என தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஒரே நேரத்தில் சிதம்பரம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 7 பேர் பணி மாறுதல் செய்த சம்பவம் கடலூர் மாவட்ட காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.