ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மற்றும் பண்டிகைக் கால சலுகையாக நெய், பனீர் போன்ற பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும், ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ.690லிருந்து ரூ.650குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110க்கும். ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90%க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மேலும் அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்து பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3குறைத்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். இதுவரை பொதுமக்கள் ரூ 1073 கோடியை சேமித்துள்ளனர். 2023 ஆம்ஆண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஒன்றிய அரசால் GST வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான அனைத்து பால் பொருட்களையும் விற்பனை விலையில் தரத்துடன் செய்துவருகிறது.தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகித குறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10 முதல் ரூ.50 வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும் ஆவின் 200 கிராம் பனீர் ரூபாய் 110என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.