தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்புள்ளதால் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.