காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங், பதிலடி கொடுத்த தெலுங்கானா முதல்வர். சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சருமான திக்விஜய்சிங் சமூக வலைதளத்தில் (எக்ஸ் தளத்தில்) ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் அந்த பதிவு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை பாராட்டும் விதமாக இருந்தது. அதாவது, 1996-ஆம் ஆண்டு குஜராத்தின் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் பதவியேற்பு விழாவின் போது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில், இளம் வயது மோடி தரையில் அமர்ந்திருப்பது காணப்படுகிறது. "இந்தப் படத்தை நான் குவோராவில் கண்டேன், இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பில் சாதாரண தொண்டனாக இருந்த ஒரு நபர் பின்னாளில் மாநிலத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் உயர்ந்துள்ளார். இது தான் அமைப்பின் சக்தி, ஜெய் சியா ராம்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு ஆர் எஸ் எஸ் அமைப்பையும், பாஜகவையும் பாராட்டும் விதமாகவும், காங்கிரசின் உட்கட்சி பூசலை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது. இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த், அரசியல் களத்தின் விளிம்பில் இருந்தவர்கள், காங்கிரஸால் எப்படி பிரதமர்களாக உயர்ந்தார்கள் என்பதைக் குறிப்பிட, சோனியா காந்தியின் தலைமைத்துவத்தை மேற்கோள் காட்டினார். "திருமதி சோனியா காந்தியின் தலைமையில், தெலங்கானாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் இருந்து தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய திரு பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் நாட்டின் பிரதமராக வந்தது சாத்தியமானது, டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு பொருளாதார நிபுணரையும் பிரதமராக்கியது காங்கிரஸ்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் 140 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் 1998 முதல் 2017 வரையிலும், மீண்டும் 2019 முதல் 2022 வரையிலும் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் தலைமைத்துவத்தை பாராட்டுவதாக இந்த பதிவு இருந்தாலும், திக் விஜய் சிங் பதிவுக்கான பதிலடி என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மக்களவை எம்.பி மாணிக்கம் தாக்கூர், "ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பைப் பரப்பும் ஒரு அமைப்பு. அது வெறுப்பை வளர்க்கிறது, வெறுப்பைப் பிரச்சாரம் செய்கிறது. அந்த அமைப்பு அல்-கொய்தா போன்றது...ஆர்.எஸ்.எஸ்-இடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை... நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பினால், நல்லவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்," என்று அவர் கூறினார்.
கட்சித் தலைவர்களிடையே நிலவும் இந்த கருத்து முரண்பாடுகள், கட்சிக்குள் இருக்கும் சலசலப்பையும், உட்கட்சி பூசலையும் வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/29/5927-2025-12-29-23-41-31.jpg)