தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி, அந்தந்த மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்த சூழ்நிலையில், பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Advertisment

இருப்பினும், கடந்த 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள்,  வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற பயத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், வடக்கு 24 பர்கானாஸில் உள்ள குஷிகட்டாவைச் சேர்ந்த 57 வயதான ஷஃபிக்குல் காஸி  என்பவர் நேற்று ஜெய்பூரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாநிலத்தில் மேற்கொள்ளும் எஸ்.ஐ.ஆரின் அச்சத்தால் ஷஃபிக்குல் காஸி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட ஷஃபிக்குல் காஸியின் மனைவி தெரிவித்துள்ளதாவது, ‘செல்லுபடியான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர் பயந்து போனார். நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். பயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இன்று காலை, தேநீர் அருந்திய பிறகு, அவர் ஆடுகளைக் கட்டச் சென்றார், பின்னர் அவர் ஆட்டுத் தொழுவத்தில் ஒரு துண்டு மூலம் தொங்கியிருப்பதைக் கண்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பிரதீப் கர் என்ற நபர், இதே போன்று எஸ்.ஐ.ஆர் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற பயத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே போல், உலுபேரியாவைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி ஜாஹிர் மால் என்ற நபர், நேற்று முன்தினம் எஸ்.ஐ.ஆர் (SIR) குறித்த பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, எட்டு பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மற்றவர்கள் பதட்டம் காரணமாக நோய்வாய்ப்பட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எஸ்.ஐ.ஆர் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.