சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவடந்தை, திருப்பத்தூர், மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இந்த மண்டல மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று (11-02-26) காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 49 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisment

இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தின் கீழ் முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த மாநாட்டில் பேசிய எம்.பி ஆ.ராசா, “சில  மாதங்களுக்கு நாடாளுமன்றத்தினுடைய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் தேர்தலுக்கு ச் சென்றார். வாக்கு திருடர்களே, ஜனநாயகத்தை  வாழவிடுங்கள் என்று தெருவில் இறங்கி போராடினார். ஜனநாயகத்தை காப்பதற்கு அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரு பதவியை வைத்துக் கொண்டிருக்கிற தலைவர் தெருவுக்கு வந்து போராடினார். அப்போது கூட பீகாரில் நீதி கிடைக்கவில்லை. மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்  இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாத ஒன்றை  செய்தார், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். வாக்கு திருடர்களை அங்கே வெளிப்படையாக விமர்சித்தார். உச்சநீதிமன்றம் அதிர்ந்து போனது. தேர்தல் ஆணையம் திருட்டு ஆணையம் என்று கேரளாவினுடைய முதலமைச்சர் கதறி கதறி அழுகிறார். நாமும் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் தமிழ்நாட்டில் கூச்சல் இல்லை, குழப்பம் இல்லை. திருடர்கள் இருக்கிறார்கள், ஆனால் திருடாமல் பார்த்துக் கொள்கிற ஒரு தலைவனை தமிழ்நாடு தான் பெற்றிருக்கிறது.  

Advertisment

எஸ்ஐஆர் என்று சொல்லப்படுகின்ற இந்த  சிறப்பு ஆய்வை வேறு எந்த மாநில கட்சியும்,  எந்த தேசிய கட்சியும் செய்யவில்லை.  இந்தியாவில் எந்த கட்சியும்  செய்யாத ஒரு பணியை பிஎல்ஏ2 நீங்கள் ஒவ்வொரு இல்லமாக சென்று செய்தீர்கள். இப்படிப்பட்ட பணியை இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்று எல்லோரும் மெச்சுகின்ற அளவிற்கு இந்த பணிகளை நீங்கள் ஆற்றி இருக்கிறீர்கள். எல்லாம் ஏறத்தாழ 90% முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 26.5 லட்சம் பேர் இறந்து போனதாக தேர்தல் ஆணையம்  சொல்கிறது.  3 லட்சத்து 50ஆயிரம் பேர் இரட்டை பதிவு  என்று சொல்லுகிறது. 66.55 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு கடைசி நிகழ்ச்சியாக உங்கள் தோள்களில் இருக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக உச்சநீதிமன்றத்தினுடைய கதவை தட்டி நோ மேப்பிங் என்று சொல்லுகின்ற 50 லட்சம்  பேரை சேர்ப்பதற்கும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என்று சொன்னவர்களை எல்லாம் சரி செய்வதற்கும் நீங்கள் செய்யக் கூடாது அரசாங்கம் மட்டும் செய்யக்கூடாது. எங்கள் பிஎல்ஏ2வையும் வைத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்று உத்தரவை பெற்ற ஒரு இயக்கம்  இந்த இயக்கம்.

அந்த இயக்கத்தினுடைய தலைவர் தேர்தல் பணியை இங்கே தொடங்கி இருக்கிறார். எனவே அந்த பணியை நீங்கள் செய்து முடிக்க  வேண்டும். நாடாளுமன்றத்தில் நான் 25 ஆண்டு காலம்  இருக்கிறேன். டி.ஆர். பாலு 35 ஆண்டு காலம் இருக்கிறார். தமிழ்நாட்டில்  ஒரு  முதலமைச்சர் இத்தனை திட்டங்களும் தருகிறார், அதனால் அவரை மீண்டும் தேர்ந்தெடுங்கள் என்று உங்களை கேட்பதற்காக  நான் வரவில்லை. அதுவும் வேண்டும் தான். 1947ல் சுதந்திரம் தர  வேண்டும் என்று முடிவு செய்ததற்கு பிறகு  1946லில்  அரசியல் நிர்ணய சபைக்கு அந்த உத்தரவை  தந்தார்கள். நாங்கள் உங்களுக்கு விடுதலை தரப்போகிறோம், ஆனால் நீங்கள்  எப்படி ஆள போகிறீர்கள்? உங்கள் அரசியல் ச ட்டம் என்ன என்று கேட்ட நேரத்தில் ஜவஹர்லால் நேருவும், அம்பேத்கரும், வல்லபாய் பட்டேலும் எதிர்தரப்பில் இருந்த பிரசாந்த் முகர்ஜியும் எல்லோரும் சேர்ந்து இத்தனை வேற்றுமைகளையும் ஒற்றுமையாக வைத்து நாம் எப்படி நம்மை ஆண்டு கொள்ள போகிறோம்  என்பதற்கு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம்.  

Advertisment

அந்த அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு உரிமை இருக்கிறது, பிற்படுத்தப்பட்டவருக்கு உரிமை இருக்கிறது, மகளிருக்கு உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதற்கு சட்டமன்றம், நாடாளுமன்றம். அந்த நாடாளுமன்றம் சட்டமன்றத்தையும் உருவாக்குவதற்கு தேர்தல் ஆணையம். இவையெல்லாம் தவறு செய்தால் கேள்வி கேட்பதற்கு உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் இருக்கிறது. இத்தனையும்  தந்திருக்கிற அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஒற்றை ஆட்சியை  கொண்டு வருவோம், மத ஆட்சியை கொண்டு  வருவோம். தமிழுக்கு மட்டுமல்ல எந்த மொழிக்கும் அடையாளம் இருக்காது, ஒரே மொழி ஒரே மதம் என்று கூப்பாடு போட்டு கொண்டிருக்கிற அமிஷாவுக்கும் மோடிக்கும்  பதில் சொல்லக்கூடியது மட்டுமல்லாமல் தடுத்து  நிறுத்துகின்ற ஆற்றல் மிக்க ஒரு தத்துவ  தலைவன் இந்தியாவில் இருக்கிறார் என்றால்  முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின் என்ற இந்த மாமனிதர் தான்.  இவரை விட்டால் ஆள் இல்லை , அதனால் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு  வெல்லட்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.