A. Raja says We accept the current Vande Mataram in Parliament
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை (09-12-25) மற்றும் நாளை (10-12-25) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் இன்று (08-12-25) மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுங்கட்சி எம்.பிக்கள், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்.பி ஆ.ராசா இந்த விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது, “இந்தியாவில் தான் தேசிய கீதம், தேசிய பாடல் என தனித்தனியாக இருக்கின்றன. தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளவுப்பட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. ஆனால் தேசிய பாடலான வந்தே மாதரம், நமது சுதந்திரத்தைப் பற்றியது. வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு எவ்வாறு இது அரசியல் ஆக்கப்படும் எனத் தெரிந்திருக்காது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம்” என்று பேசினார்.
Follow Us