புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில், சேலத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று வானில் நேற்று (13.11.2025) பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை சாதுரியமாகவும், பத்திரமாகவும் திருச்சி - புதுக்கோட்டைத் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கினார். முன்னதாக வானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தன. இருப்பினும் விமானத்தை ஓட்டி வந்த விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இந்த விமானத்தில் 2 பேர் பயணித்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அச்சமயத்தில் தேசிய சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டது. 

Advertisment

எனவே நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே சமயம் விமானம் தரையிறக்கப்பட்ட இடம் நெடுஞ்சாலை என்பதால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் விமானத்தின் அருகே நின்று செல்பி எடுத்தும், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பயிற்சி விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.   

Advertisment

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் அருகே உள்ள உப்பளம் பகுதியில் இன்று (14.11.2025) மதியம் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த பயிற்சி விமானி நல்வாய்ப்பாக பாராசூட் மூலமாக காயங்கள் இன்றி தரை இறங்கி உயிர் தப்பினார். இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த அனைத்து பாகங்களும் அடையாளம் தெரியாத அளவிற்கு சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தைக் காண ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து தகவல் அறிந்த உடனே சென்னையில் இருந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்றும் அங்கு தரையிறங்கியது. அதன் பின்னர் விமானி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பயிற்சி விமானங்களை சரியாக பராமரிக்க வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Advertisment