A plan to package a farming village? - Shocking action by farmers in the style of the film 'Kaththi' Photograph: (thenkasi)
வழக்கமான திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்ட தினத்தின் போது தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மக்கள் தங்களின் மனுக்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அதற்காக ஆட்சியரின் அலுவலகத்தின் முன்னே வழக்கத்திற்கு மாறாக ஒரே கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். இவர்களில் குறிப்பிட்ட சிலர் ஆட்சியரைச் சந்தித்து தங்களது பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக விளை நிலங்களில் உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை அழித்து விவசாயத்தை நாசப்படுத்தி வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5495-2025-10-11-17-59-21.jpg)
அப்போது அலுவலகம் முன் திரண்டிருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் திடீரென்று சிலர் தங்கள் கையில் இருந்த பாட்டில்களில் இருந்த மண்ணெண்ணையை தங்கள் தலையில் ஊற்றிக் கொண்டு அருகிலிருந்த சிலர் மீதும் அதை ஊற்றினர். இதில் 7க்கும் மேற்பட்டோர்களின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. இதைக்கண்டு பரபரப்பான போலீசார் சுதாரித்து கொண்டு அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர். ஒரு சிலர் தீவைக்க முயன்றபோது கடும் முயற்சிக்குப் பின் அவர்களை போலீசார் தடுத்தனர். நாங்கள் சாவதற்கு தயாராகத்தான் வந்திருக்கிறோம். எங்களின் பூர்வீக கல்லத்திகுளம் கிராமத்தின் விவசாய பூமிகள் நாசமாக்கப்பட்டு. சுடுகாடாக்கப்பட்டுவிட்டது. வாழ்வதற்கு தகுதியற்ற எங்கள் கிராமத்தில் நாங்கள் இருந்தென்ன போயென்ன. அதற்காகத்தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று ஓங்கி குரலெழுப்பியிருக்கிறார்கள். இதில் தடுத்த போலீசாரின் மீது தங்களின் எதிர்ப்பை கடுமையாகக் காட்டிய மக்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்கள். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. கூடுதலாக வரவழைக்கப்பட்ட போலீசாரால் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 108 விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5488-2025-10-11-17-59-50.jpg)
ஆட்சியரின் அலுவலகத்தின் முன்னே 7க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றது மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மின்செலவை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு, அரசுக் கட்டிடங்கள் உட்பட பிற பகுதிகளில் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டமே சோலார் பேனல் திட்டம். சோலார் பேனல்கள் பசுமை ஆற்றலான சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. பின் பேட்டரி மூலம் மின் சேமிப்பு செய்து மின் தடையின் போது தொடர்ச்சியான சேவையை வழங்க முடியும். இப்படியான சோலார் மின் திட்டத்தைதான் தமிழக அரசு அண்மையில் அறிமுகப் படுத்தியும் அதற்கான தயாரிப்பை ஊக்கப்படுத்தியும் வருகிறது. ஆனால் கல்லத்தி குளத்தின் சோலார் பேனல் அமைப்போ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் அமைக்கப்பட இருப்பதுதான் அந்த கிராம மக்களை இந்த எல்லை வரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5493-2025-10-11-18-01-04.jpg)
ஆளங்குளம் அருகேயுள்ள மாறாந்தை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கல்லத்தி குளம் கிராமம். சுமார் 300 வீடுகளைக் கொண்ட அங்கே 1000த்திற்கும் மேற்பட்டோர். பரம்பரையாக குடியிருந்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தொழிலே விவசாயம் சார்ந்தது தான். நாம் கல்லத்திகுளம் சென்ற போது தங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பறிபோன வேதனையில் அந்த மக்கள் நடைபிணமாக முடங்கிவிட்டனர்.
அங்குள்ள வேளாண் மக்களுடன் நாம் பேசியதில், காலங்காலமாக பட்டம் தவறாத மழைச் சூழலையும் பசுமையான ஏரியாவையும் கொண்டது கல்லத்திகுளம் கிராமம். அங்குள்ள தங்கள் நிலங்களில் பருத்தி, நெல் போன்றவைகளை பயிரிட்டு வந்திருக்கிறார்கள். அதையடுத்துள்ள வனத்துறையின் ரிசர்வ்டு பாரஸ்டான காப்புக்காட்டையெயட்டி 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிட்டு வந்திருக்கின்றனர். அதோடு அந்த ஏரியாவில் லட்சக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டதால் கல்லத்திகுளம் சூழலே ரம்மியமாகவும் குளிர்ச்சியாவும் இருந்திருக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் அறியாதவர்கள் தான். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இந்த விவசாயிகள் ஆடுமாடுகள் கால்நடைகளை வளர்ப்பதற்காக அருகிலுள்ள சிவலார்குளம் கூட்டுறவு வங்கியில் தங்களின் நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் நோயாலும் தொடர்மழை காரணமாகவும் நோய்வாய்ப்பட்ட ஆடு மாடு கால்நடைகள் மடிந்திருக்கின்றன. இதனால் அவர்களால் வங்கியில் வாங்கிய தங்களின் கடன்களை அடைக்கமுடியாமல் போயிருக்கிறது. இதுகுறித்த விபரங்களோ நோட்டீசோ விவசாயிகளுக்கு அனுப்பாமலிருந்திருக்கிறது. கடன் சுமையோடு வட்டியும் சேர ஒரு காலகட்டத்திற்குப் பின்பு ஜப்தி நோட்டீஸ் கொடுத்த அந்த வங்கி தங்களிடம் அடமானமாக வைக்கப்பட்ட அத்தனை ஏக்கர் நிலத்தையும் ஜப்தி செய்து ஏலம் விட்டபோது அந்த 200 ஏக்கர் நிலங்கள் அனைத்தையும் சென்னையை சேர்ந்த ரமணி என்பவர் வாங்கியிருக்கிறார். அதன்பின் அந்த பார்ட்டி அந்த நிலங்களில் ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர் வகைகளையே பயிரிட்டு வந்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5491-2025-10-11-18-01-26.jpg)
கடன் கட்டாததால் நிலம் ஜப்தி போனதை அறிந்த விவசாயிகள் ஏலத்தில் எடுத்தவரும் விவசாயம் தானே செய்கிறார் என்ற கணிப்பிலிருந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் நில புரோக்கர்களின் மூலம் அருகில் இருக்கும் திருச்சி பார்ட்டி ஒருவருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தையும் சென்னை பார்ட்டி வாங்கியதோடு மொத்தமாக விவசாயம் செய்திருக்கிறார். இப்படி வாங்கப்பட்ட 350 ஏக்கர் வனத்துறையின் காப்புக்காடான ரிசர்வ் ஃபாரஸ்ட்டையொட்டி அமைந்திருக்கிறது. மேலும் இந்த நிலங்கள் காலம் காலமாக வளர்க்கப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களையும் கொண்டவைகள். இதனிடையே கல்லத்திகுளத்தை தாண்டிய சில தரிசு காட்டுப் பகுதிகளில் சோலார் மின் பேனல் அமைக்கும் திட்டம் ஏற்பாடாகி வருகிறது. இந்தச் சூழலில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சென்னை பார்ட்டி தன்னிடமுள்ள 350 ஏக்கர் நிலத்தையும் நில புரோக்கர்கள் மூலம் தான் வாங்கிய விலையிலிருந்து 5 மடங்கு கூடுதல் விலைக்கு அத்தனை ஏக்கர் நிலத்தையும் கோவையைச் சேர்ந்த வி.சி. கிரீன் எனர்ஜி பி. லிமிடட் கம்பெனிக்கு(V.C GREEN ENERGY PRIVATE LIMITED) கடந்த ஜூன் மாதம் விற்றிருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5497-2025-10-11-18-02-16.jpg)
வாங்கிய அந்த கம்பெனி அந்த நிலங்களிலுள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி சமன் செய்து சோலார் மின் பேனல்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதையறிந்த கல்லத்திகுளம் விவசாயிகள் அவர்கள் மரத்தை வெட்டும் போதே ஆலங்குளம் காவல்நிலையத்திற்கும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கும் இதனை தடுப்பதற்காக புகார் மனு கொடுத்தவர்கள் அங்கே சோலார் மின் பேனல் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் இந்த மனுவின் மீது காவல்துறை மற்றும் ஆட்சியர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். சோலார் மின் பேனல் அமைப்பதற்கு கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டார்களாம். விளை நிலங்களை அழித்தும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதில் தங்களின் விவசாய வாழ்வாதரம் முற்றிலும் பறிபோனது. அதனால் தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டை அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்ததில் இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லையாம்.
மேலும் சோலார் மின் பேனலுக்காக அழிக்கப்பட்ட அந்த விவசாய நிலங்கள் வனத்துறையின் ரிசர்வ் ஃபாரஸ்டையொட்டி வருவதால் அந்த ஏரியா சிறப்பு பகுதியான ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிக்கு இணையான ஹில் ஏரியா கன்சர்வேட்டிவ்(HILL AREA CONSERVATIVE) சட்டத்தில் வருவதால் அதன்படி மரங்கள் வெட்ட தடையிருக்கிறது. மேலும் சிறப்பு ஏரியாவிற்குரிய ப்ரிசர்வேஷன் ஆக்ட் 1955 (HILL AREA PRESERVATION ACT-1955) SEC 3 ன் படி மரங்களை வெட்டக்கூடாது. மீறினால் குற்றம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு அதிகாரிகள் வனத்துறையினர் இந்த விதியை பின்பற்றவில்லை. மின் திட்டத்திற்காக 350 ஏக்கர் விவசாய பூமியே அழிக்கப்பட்டுவிட்டதால் தரையிறங்கி முன்பு காப்புக்காடுகளில் தங்கியிருந்த வன மிருகங்கள் ஊருக்குள் புகுந்துவிடுவதும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இதுபோன்று வனவிலங்குகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் போனதால் 7 மான்கள் ஒரு தேசியப்பறவை உள்ளிட்டவைகள் மடிந்துபோயிருக்கின்றன.
கல்லத்திகுளத்திற்குச் சற்றுத் தொலைவில் ஆயிரக்ககணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருப்பதால் அங்கே சோலார் மின் திட்டம் அமைக்கலாமே. நாங்கள் சோலார் மின்பேனல் அமைக்கவேண்டாமென்று எதிர்க்கவில்லை. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து மின் திட்டம் அமைக்க வேண்டுமா என்பதுதான் எங்களின் கேள்வி. வேறு வழியில்லாமல் நாங்கள் இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் வரை கொண்டுபோனதில், அதனை விசாரித்த உயர் நீதிமன்றமும் கல்லத்திகுளம் திட்டத்திற்கு 24 அக்ட. வரை தடை உத்தரவும் வழங்கியிருக்கிறது என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5492-2025-10-11-18-02-45.jpg)
இதுகுறித்து விவசாயியான பெருமாள் சொல்லும் போது, ''மரங்கள் வளர்த்து மழை பெற பசுமைச் சூழலை உருவாக்குங்கள் என்று அரசு சொல்லுகிறது. ஆனால் இங்கோ பசுமையை அழித்து கந்தக பூமியாக்குகிறார்கள். சோலார் மின் பேனல்களில் படியும் அசுத்தங்கள் மணல் திட்டுக்களை 10 மாதங்களுக்கு ஒரு முறை சுத்த நீர் கொண்டு முழுமையாக சுத்தப்படுத்தினால் தான் அவைகளின் மூலம் மீண்டும் மின் தயார் செய்ய முடியும். அதற்காக அத்தனை சோலார் மின் பேனல்களுக்கும் 15 லட்ச லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவைப்படும். அதற்காக அந்த ஏரியாவின் நிலத்தடி நீரை உரிஞ்சித்தான் ஆகவேண்டும். இதனால் மிச்சம் இருக்கிற விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீரும் வற்றிப்போய்விடுமே. நாங்கள் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டோம். பறிபோன எங்களின் விவசாய வாழ்வாதாரத்தை மீட்க முடியவில்லை. எங்கள் மக்களின் பிழைப்பிற்கு மார்க்கமும் தெரியவில்லை. சட்டப்படி போராடுகிறோம். முடியவில்லையெனில் எங்களின் ஆதார் மற்றும் ரேசன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் அல்லது நாடு கடத்திவிடுங்கள் என்று போராட கோரிக்கை வைக்கப் போகிறோம்'' என்றார் வேதனையோடு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5494-2025-10-11-18-03-15.jpg)
300 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று நம்மிடம் தெரிவித்த கிராமத்தின் கண்ணன், ''சோலார் மின் தயாரிப்பு அமைக்கப்பட்ட இடத்தையொட்டித்தான் எங்கள் கிராம மக்களின் குடியிருப்பு இருக்கிறது. அப்படி ஒட்டுமொத்தமாக சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது சோலார் பேனல்கள் வெளியேற்றுகிற மொத்த வெப்ப அலையும் எங்களின் குடியிருப்பைத்தான் தாக்கும் அந்த அனலின் வெப்பத்தில் நாங்கள் எப்படி குடியிருக்க முடியும். கல்லத்திகுளம் மக்கள் வாழத் தகுதியற்ற வெப்ப பூமியாகிவிடுமே. அதனால்தான் நாங்கள் இத்திட்டத்தை தரிசுக் காடுகளில் அமையுங்கள் அதற்காக பசுமை விளைநிலத்தை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தை சவாலாக்க வேண்டாம் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார் அழுத்தமான குரலில்.
கல்லத்திகுளத்தின் வாழ்வாதாரமும் மக்களின் எதிர்காலமும் அரசு மேற்கொள்ளும் முடிவில் தான் இருக்கிறது. ஆனாலும் அரசு காப்பாற்றும் என்ற துளி நம்பிக்கை அந்த மக்களிடம் இருப்பதும் தெரிகிறது.