மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பாக இயங்கி வரும் ரயில் நிலையங்களில் ஒன்று மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். இங்கு நேற்று மதியம் 3.20 மணியளவில் நடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் ரயில் நிலையத்திற்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு நபர் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். ரயில் மிக அருகில் வந்த போதும் கூட அவர் எழவில்லை. மேலும், ரயில் ஓட்டுநர் பல முறை ஹாரன் அடித்தும் அந்த நபர், எதையும் பொருட்படுத்தாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது அருகிலிருந்த மக்கள், கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும், அவர் எதையும் கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருந்தார். அவர் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த ஓட்டுநர் மெதுவாக ரயிலின் வேகத்தைக் குறைத்தார். இதையடுத்து, ரயில் அந்த நபருக்குச் சற்று முன்னாள் நிறுத்தப்பட்டது. இதனால், அவர் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பித்தார்.

Advertisment

இதையடுத்து அந்த நபரை எழுப்பிய பின்பு, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் விவேக் மற்றும் தலைமைக் காவலர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தண்டவாளத்தில் படுத்துக் கிடந்த நபர் அவினாஷ் பிரகாஷ் கார்டிலே (18) என்பது தெரியவந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில், அவர் சிஎஸ்எம்டி பேருந்து நிலையம் அருகே உள்ள நடைபாதையில் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், மது போதையில் இருந்த அவர் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.  

பின்னர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், ரயில்வே சட்டம் பிரிவு 147ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment