தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் மாவட்டம் தோறும் தொழில் நுட்ப பூங்காக்களை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில், இது குறித்து இன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ள துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “திண்டுக்கல்லில் உதயமாகிறது புதிய டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா. முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னைக்கு மட்டுமின்றி, மாவட்டங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் 7 TIDEL Neo மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. மேலும் 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதோடு, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் நகரங்களின் 3 புதிய TIDEL Park-களை அமைக்கும் பணியை திராவிட மாடல் ஆட்சி துவங்கியுள்ளது. மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு.
இந்த வரிசையில் முதலமைச்சரின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல்–தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய ‘மினி டைடல் பார்க்’ ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us