ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதை ஆகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகம் தாளவாடி அருகே குருபருண்டி கிராமத்தில் சிக்கமாதேகவுடா என்பவர் தனது விவசாய நிலத்தில் ராகி பயிர்களை அறுவடை செய்துள்ளார். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைக் கூட்டம் ராகி பயிர்களை தின்றும், மிதித்தும், சேதம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. ஜீரகள்ளி வனத்துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் வந்து ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisment

யானைகள் சேதம் செய்த ராகி பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சமீப காலமாக கர்நாடகா மாநிலம் வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லை வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கர்நாடகாவில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் அதிக அளவில் இடம்பெயர்ந்து தோட்டங்கள், விளை நிலப்பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.