A government school student found an Eelam coin with the name of Rajaraja Chola engraved on it
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/16/par-2025-12-16-16-06-24.jpg)
செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, “மாணவன் கண்டெடுத்தது முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த செம்பால் ஆன ஈழக்காசு ஆகும். வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதலாம் ராஜராஜ சோழனின் இலங்கை வெற்றியின் பின்னணியில் சிறப்பு வெளியீடாக ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது.
இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசில் பாசிபடர்ந்திருப்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லை. ஓரங்கள் தேய்ந்துள்ளன. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமண்குண்டு, அழகன்குளம், கோரைக்குட்டம், திருப்புல்லாணி போன்ற பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளநிலையில், உள்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஊர்களில் இக்காசுகளை கண்டெடுத்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார். பழமையான காசை கண்டறிந்த மாணவனை பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Follow Us