A government bus and a private bus collide head-on in mannarkudi
சில தினங்களுக்கு தென்காசி மாவட்டத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த விபத்து நடந்த சில நாட்களிலேயே, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மீது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்,பேருந்துகளில் பயணம் செய்த 9 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்தனர்.
இந்த இரு சம்பவங்கள் நடந்து தமிழக மக்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேருந்து விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து திருத்துறைபூண்டி மற்றும் திருவாரூர் செல்லக்கூடிய இரண்டு சாலைகளுமே அதிக வளைவுகளை சாலைகள் ஆகும். இந்த நிலையில், மன்னார்குடியில் இருந்து திருத்துறைபூண்டி சாலையில் இன்று (07-12-25) திருத்துறைபூண்டியில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே சமயம், அந்த சாலையில் தனியார் பேருந்து ஒன்று எதிராக வந்து கொண்டிருந்தது.
அதிவேகமாக வந்த இரு பேருந்துகளும் கோட்டூர் பகுதியில் உள்ள ஒன்றிய யூனியன் அலுவலகம் அருகே நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், பேருந்துகளில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மன்னார்குடி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் சாலை வளைவு இருந்ததாலும் தனியார் பேருந்து அதிவேகத்தில் வந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us