கடலூரில் பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்த சிவசங்கரன்- ஞானசவுந்தரி தம்பதியருக்கு கடந்த 2023ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இரு குழந்தைகளையும் வளர்த்து வந்த நிலையில் இன்று (04.09.2025) காலை தந்தை சிவசங்கரன் சிறிய குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த போது பெரிய குழந்தை குணஸ்ரீ வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பெரிய குழந்தை குணஸ்ரீ அருகில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளார்.
வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைக் காணவில்லை என்று தேடியுள்ளனர். அப்போது குழந்தை தண்ணீர் வாளியில் மூச்சுத் திணறி கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். பின்னர் குழந்தையை மீட்டுப் பெற்றோர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் தாய், தந்தை, உறவினர்கள் கதறி அழுதனர். தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.