ஜல்லிக்கட்டு காளைகள், கால்நடைகளை தங்கள் வீட்டில் ஒருவராக, குழந்தையாகவே வளர்த்து வருகின்றனர். அப்படி வளர்க்கப்படும் காளைகளுக்கு செல்லப் பிராணிகளுக்கு சிலைகள் அமைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு ஊரில் பல களம் கண்டு மறைந்த ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கு கோயிலே கட்டி குடமுழுக்கு நடத்தியுள்ளனர் ஒரு குடும்பத்தினர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கண்டியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமாடி அ.மலையாண்டி. இவரது குடும்பத்தினர் கடந்த 10 வருடங்களுக்கு மேல் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டுக் காளை, பாலமேடு, அலங்காநல்லூர் என தமிழ்நாட்டில் பல ஜல்லிக்கட்டிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கம் வெள்ளி காசுகளையும் பல்வேறு பரிசுகளை குவித்துள்ளது . இந்த காளையை ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் பெரிய கருப்பர் காளை என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ளது.

Advertisment

27 வயதான இந்தக் காளை கடந்த ஆண்டு வயது முதிர்வால் உயிரிழந்தது மலையாண்டி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இறந்த காளையை தங்க தோட்டத்திலேயே அடக்கம் செய்துள்ளனர். அந்த காளையை குடும்பத்தினர் அனைவரும் தெய்வமாக பார்த்துள்ளனர். அதனால் அந்தக் காளைக்கு கோயில் கட்ட முடிவு செய்த மலையாண்டி குடும்பத்தினர் காளை சிலை அமைத்து மண்டபம் கட்டி கோயிலாக வடிவமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கிராம மக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க யாகசாலை பூஜைகளுடன் பெரியகருப்பர் காளை ஆலயம் குடமுழுக்கு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இறந்த ஒரு காளைக்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தியிருப்பது காளை மீதான அன்பையும் பக்தியையும் காட்டுகிறது என்கின்றனர் பொது மக்கள்

Advertisment