A devotee adorned 35-foot tall horse statue of Ayyanar Temple garland Rs. one lakh
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடந்து வந்த நிலையில் சமீப காலமாக 3 நாட்கள் நடக்கிறது. காரணம், குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பதில் பக்தர்களுக்கு வசதிக்காக இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது திருவிழாவின் முக்கிய நிகழ்வே கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 33 அடி உயர வெள்ளைக் குதிரை சிலைக்கு அதே உயரத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காகித மாலைகள் அணிவிப்பது தான். குதிரை சிலைக்கு, மாலை அணிவிக்கும் அழகை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். ஆண்டுக்காண்டு குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது அதிகரித்து வருவதால் மாசிமகத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக் கிழமை காலை கிராமத்தின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட பிறகு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மலர்கள், பழங்கள் காகித மாலைகள் அணிவித்தனர். பல ஆயிரக்கணக்கான மாலைகள் வந்ததால் 3 வது நாளிலும் மாலை அணிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு உப்புவிடுதி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் - விஜய் குடும்பத்தினர் வித்தியாசமாக ரூ.50, ரூ.100 பணத்தாள்களில் ஒரு லட்சம் பணத்தில் 35 அடி உயரத்தில் மாலை செய்து வேனில் ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்தனர். பண மாலையை குதிரை சிலைக்கு அணிவித்த பிறகு நிர்வாகினர் பெற்றுக் கொண்டனர். குதிரை சிலைக்கு அணிவிக்க பண மாலை வேனில் ஏற்றி வந்ததைப் பார்த்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். இதுவரை குதிரை சிலைக்கு காகிதம், பூ, பழ மாலைகள் அணிவிப்பதைப் பார்த்திருக்கிறோம். இப்போது தான் பணமாலை அணிவிப்பதை காண்கிறோம் என்றனர் பக்தர்கள். இந்த மாலை சேந்தன்குடி கிராமத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று இரவு தெப்பத்திருவிழாவும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
Follow Us