தமிழ்நாட்டில் கடந்த 30, 40 வருடங்களுக்கு முன்பு நாடோடிகளாக இருந்த நரிக்குறவர் (பழங்குடியினர்) மக்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் வசிக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவும் அரசாங்கத்தால் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வேறு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்தனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியலின மக்களின் குடியிருப்புகள், நரிக்குறவர் குடியிருப்புகளில் உள்ள சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கணக்கெடுத்து குறிப்பிட்ட அளவு வீடுகளை மறுசீரமைப்பு செய்து புதிய வீடுகள் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பில் ஏற்கனவே குடியிருந்த பழுதடைந்த வீடுகள் கணக்கிட்டு அரசு 193 வீடுகள் கட்டுவதற்காக குடியிருந்த வீடுகள் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டு மாதக்கணக்காகிறது. இதனால் பிளாஸ்டிக் சீட்டுகளை வைத்து தற்காலிக தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து மக்கள் வசிக்கின்றனர்.
தொண்டு நிறுவனத்தின் பணிகள் நடந்து வந்தாலும் அரசு கட்டும் 193 வீடுகளும் பில்லர் குழிகள் தோண்டி கம்பிகள் நட்டதோடு நிற்கிறது. இந்நிலையில் கடந்த பல வாரங்களாக அறந்தாங்கி பகுதியில் மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் சீட்டுகள் போட்ட செட்களில் தங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை வைத்துக் கொட்டும் மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இனி வரும் மழைக்காலங்களில் நாங்கள் எங்கே தங்குவது, உணவு, உடைகள் வைக்க கூட இடமில்லை. உடைக்கப்பட்ட வீடுகளை வேகமாக கட்டித்தர அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறுகிறார்கள் மக்கள்.