A 4-year-old child lost her lives of pneumonia due to a spreading fever
திருநெல்வேலி மாவட்டத்தில் தீயாய் பரவும் காய்ச்சலால், 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த சூழ்நிலையில், அம்மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பலருக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் வரை நாள்தோறும் 15 நபர்களுக்கும் குறைவாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி வ.உ.சி நகரைச் சேர்ந்த 4 வயதான ருத்விகா என்ற பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ருத்விகா என்ற குழந்தை, நேற்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனை தரப்பில், உயிரிழந்த குழந்தையின் நுரையீரலை சுற்றி அதிகளவில் சளி சேர்ந்ததால் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறப்பான சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா காய்ச்சலால் 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் திருநெல்வேலியே பீதியில் உறங்கியுள்ளது.
  
 Follow Us