2025 ஆம் ஆண்டிற்கான விருந்து வழங்கும் விழா நேற்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., “எல்லோரும் தேர்தல் கணக்குப்போடும் போது, நாம் தேசத்தின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  எத்தனை தொகுதிகளில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்பத்திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் திருமாவளவனையும், சிறுத்தைகளையும் மதிப்பிட முடியவில்லை என்பதே என்னுடைய பார்வை. அவர்கள் சராசரி இயக்கவாதிகளை போல் நம்மை பார்க்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற கேள்விக்ளை கேட்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். நாம் அவற்றை எல்லாம் கடந்தவர்கள். அவர்களுக்கு இது தற்போது புரியாது. இதனை புரிந்துகொள்வதற்கே அவர்கள் நம்மை இன்னும் பல ஆண்டுகள் படிக்க வேண்டும். 

ஏதோ திருநீறு அழித்துவிட்டார் திருமாவளவன் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எப்படியாவது எங்களை பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள். ஆதரவாகவோ, எதிராகவோ பேசிக்கொண்டே இருங்கள். ஏனென்றால், நாங்கள் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.  எங்களுக்கு வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடாதீர்கள். 6 சீட் கொடுத்தோம், 7 சீட் கொடுத்தோம்.. 10 சீட்டுக்கு மேல் இவர்களுக்கு எப்போதுமே தரமாட்டோம் என்று கூறாதீர்கள். அது உங்கள் மதிப்பீடு. ஆனால், எங்களை பொறுத்தவரையில் நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள். அந்த வலிமை எங்களுக்கு உண்டு. இதனை நான் ஆணவத்துடனும், தேர்தல் கணக்கிலும் மட்டுமே சொல்லவில்லை. சமூக மாற்றத்தின் பார்வையின் அடிப்படையில் சொல்கிறேன். அதனால் தான் தேசம் காப்போம் என்ற பேரணியை நடத்திய நாம், இன்றைக்கு மதச்சார்பின்மை பேரணியை நடத்துகிறோம். மதச்சார்பின்மை தான் இந்திய அரசியலின் கருப்பொருளாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு அணி அம்பேதருக்கு ஆதராவகவும், ஒரு அணி எதிராகவும் இருப்பதுதான் இந்தியத் தேசிய அரசியல், ஒரு அணி அரசியலமைப்புக்கு ஆதரவான அணி மற்றொரு அணி அதற்கு எதிரான அணி. இதுதான் நமது தேசத்தின் தற்போதைய அரசியல்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதச்சார்பின்மைக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்த பின்புதான், மதச்சார்பின்மைக்காக முரண்பாடுகள் இன்றைக்குக் கூர்மையடைந்திருக்கிறது. அது குறித்தான விவாதம் தீவிரமடைந்திருக்கிறது. அதற்காக நாம் பாஜகவிற்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.