அண்மையாக பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டு வரும் அதிகார மோதல்கள் பேசுபொருளாகி வருகிறது. அன்புமணி தலைமையில் மாவட்ட வாரியாக பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்த  பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு யாராவது ஹாஸ்பிடல் போய் இருதய பிரச்சனை என்று படுப்பார்களா? நான் என்ன தனியார் மருத்துவமனையிலா போய் சேர்ந்தேன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தான் இருந்தேன். உண்மையிலேயே எனக்கு  மன அழுத்தம் இருந்தது. வேறு ஒன்றும் இல்லை.

தொடர்ந்து ராமதாஸ் பேசிக்கொண்டு செல்கிறார். அன்புமணியும் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். விரைவில் இந்த பிரச்சனை முடிய வேண்டும். தேர்தலை நோக்கி எங்களுடைய வெற்றி பயணம் வேகமெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. விரைவில் அது நடக்கும். பூம்புகார் மகளிர் மாநாட்டைப் பொறுத்தவரைக்கும் மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதற்காக அவர் அழைத்திருந்தார். அதற்காக வந்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை மாநாடு தான் முக்கியம்'' என்றார்.

இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் ராமதாஸ். இன்று செய்தியாளர் சந்தித்த ராமதாஸ், ''இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 10 நடைபெற இருக்கின்ற பூம்புகார் மகளிர் மாநாட்டைப் பற்றி பேசவும், புதிதாக போடப்பட்டிருக்கின்ற மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நடத்தப்பட்டுள்ளது. பாமக எம்எல்ஏ அருளுக்கு பாமகவில் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அருள் எப்போதும் என்னுடன் இருப்பார். பாமகவில் இமயமலை அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.