கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்ட நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை வீழ்த்த கலைஞர் எவ்வளவோ முயற்சி செய்தார், அத்தனை முயற்சியும் முறியடித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா அதிமுகவிற்கு வந்த போது எவ்வளவு பிரச்சனையை உருவாக்கினார்கள். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 ஆக பிளவுபட்ட போது, எப்படியாவது அதிமுகவை அழிப்பதற்குக் கலைஞர் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். ஆசியாலும், தெய்வத்தின் ஆசியாலும் அருளாலும் அதிமுக ஒன்றாக இணைந்தது. ஜெயலலிதா மக்களால் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
அதிமுகவைக் கலைஞராலேயே வீழ்த்த முடியவில்லை. உடைக்க முடியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே உங்களுடைய கனவு ஒரு போதும் பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் ஸ்டாலின். சில சந்தர்ப்பவாதிகள், நன்றாகத் தெரியும் சில துரோகிகள் சில எட்டப்பர்கள் திமுகவோடு சேர்ந்து ஜெயலலிதா ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தார்கள். மக்களால், மக்களுடைய ஆதரவால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்திலே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு அதிமுக ஆட்சியைத் தொடர வைத்தோம்.
அப்பொழுது கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுக்க முடியாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியில் போனார். அதிமுக உடைக்க நினைத்தவர்களைச் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேறிய காட்சி எல்லா தொலைக்காட்சியிலும் வெளி வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே அதிமுகவை ஒரு போதும் வீழ்த்த முடியாது. எப்பொழுது பார்த்தாலும் பேசுவார் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று 10 தேர்தலிலே தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று சொல்வீர்கள். சொல்லிக்கொண்டிருக்கின்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே 2011லிருந்து 2021 வரை எத்தனை முறை நீங்கள் தோல்வியுற்றீர்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 2011இல் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து விமர்சனம் செய்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லை” எனப் பேசினார்.