தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் இன்று (16.07.2025) உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் நடுவதற்கு அனுமதி தர முடியாது என்று தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த (திமுக) கூட்டணியில் இருக்க வேண்டும். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் தொடர வேண்டும். சிந்தித்துப் பாருங்கள். அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் எங்கள் கூட்டணியில் சேர்கின்றவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்ற கட்சி அதிமுக கட்சி” எனப் பேசினார்.