புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு6 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கு புதியதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 30ஆம் தேதி மாநில தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். மற்றொரு புறம் அக்கட்சியில் கட்சியில் சில மாற்றங்களை கொண்டுவர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இதில் முதல் கட்டமாக 3 நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் இன்று (27.06.2025) மதியம் பெறப்பட்டது எனக் கூறப்படுகிறது. 

அதே சமயம் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பாஜகவை சேர்ந்த சாய் சரவணகுமார் ஆவார். இந்நிலையில் சாய் சரவணகுமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கையில் கட்சி தலைமை கேட்டுக் கொண்டதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக சாய் சரவணகுமார் தெரிவித்துள்ளார். மேலும்  இதில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த பதவியை பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் எம்.எல்.ஏ.வுக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.